சென்னை: லியோ திரைப்பட குழுவினர் மீது நடனக் கலைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர். விஜய் நடிப்பில் உருவாகும் படம், ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இதில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘நான் ரெடி’ பாடலுக்கு பின்னணியில் நடனமாடிய கலைஞர்களுக்கு உரிய ஊதியம் தரவில்லை என சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட பின்னணி நடன கலைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர். லியோ படத்தின் நான் ரெடி தான் பாடலுக்காக 6 நாட்கள் நடனம் ஆடியதற்காக ஒரு நாள் கூட சம்பளம் தரவில்லை என நடன கலைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்னும் 3 நாட்களுக்குள் சம்பவளம் வரவில்லை என்றால், நிச்சயம் நீதிமன்றத்திற்கு செல்வோம் என நடன கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.