திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் பாக்யா சுரேஷின் திருமணம் கடந்த 17ம் தேதி குருவாயூர் கோயிலில் நடந்தது. மகளின் நகைகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான சில தகவல்கள் பரவின. நகைகளுக்கு உரிய வரி கட்டாமல் மோசடி செய்துள்ளார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக வெளியான கருத்துகளுக்கு சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய முகநூலில் கூறியிருப்பதாவது: திருமணத்தின்போது என்னுடைய மகள் அணிந்திருந்த நகைகள் பெற்றோர் மற்றும் பாட்டி நன்கொடையாக வழங்கியதாகும். அனைத்திற்கும் ஜிஎஸ்டி உள்பட முறையாக வரிகளை கட்டியுள்ளேன். சென்னை, ஐதராபாத்தை சேர்ந்த கலைஞர்கள் தான் அந்த நகைகளை வடிவமைத்தனர். தயவுசெய்து இதுபோன்ற அவதூறான தகவல்களை பரப்பி என்னுடைய குடும்பத்தை சிதைக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
146