சென்னை: இதுவரை 14 படங்களை இயக்கி, நடிப்புடன் சேர்த்து 37 படைப்புகளை வழங்கியிருக்கும் சேரன் எழுதி இயக்கியுள்ள முதல் வெப்தொடர், ‘ஜர்னி’. கடந்த 12ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இதில் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், திவ்யபாரதி, காஷ்யப் பார்பயா, ஜெயப்பிரகாஷ், வேல.ராமமூர்த்தி, இளவரசு, அனுபமா குமார், ‘நாடோடிகள்’ பரணி நடித்திருந்தனர். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசை அமைத்திருந்தார்.
வெப்தொடர் இயக்கியது குறித்து சேரன் கூறியதாவது: ஒரு திரைப்படத்தை உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டுமோ, அதே அளவு வெப்தொடருக்கும் உழைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். என்னையும், என் ஸ்கிரிப்ட்டையும் நம்பி முழு பொறுப்பையும் ஒப்படைத்த சோனி லிவ் நிறுவனத்துக்கு நன்றி. ஒரு திரைப்படத்தில் 2 அல்லது இரண்டரை மணி நேரத்தில் கதை சொல்லியாக வேண்டும். வெப்தொடரில் ஒரு பெரிய கதையை விரிவாகவும், அழுத்தமாகவும், ஆழமாகவும், நாம் நினைத்தபடி சொல்லவும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அதை ‘ஜர்னி’யில் சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன். வழக்கமான ஓடிடி ஜானரில் இருந்து விலகி, அனைத்து தரப்பு மக்களுக்குமான கதையை எழுதி இயக்கினேன். ‘ஜர்னி’ வெப்தொடரின் வெற்றி எனக்கு புதிய அனுபவமாக இருக்கிறது. இனி என் பாதையை டைரக்ஷன் பக்கம் மட்டுமே செலுத்துவேன். அடுத்து கிச்சா சுதீப் தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிக்கும் படத்தை இயக்குகிறேன்.