சென்னை: ராம்சரண், கியரா அத்வானி நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா படம் கேம் சேஞ்சர். இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இதற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார். இது முழுநீள அரசியல் கதை படமாக உருவாகிறது. இது பற்றி கார்த்திக் சுப்புராஜ் கூறியது: கேம் சேஞ்சர் அரசியல் கதையாக நான் எழுதினேன். எனது உதவியாளர்கள் அதை படித்துவிட்டு, இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப்பெரிய ஸ்டார்களை வைத்து மட்டுமே எடுக்க முடியும் என்று கூறினார்கள்.
அதே நேரத்தில் முழுக்க முழுக்க ஒரு அரசியல் படத்தை தான் எடுக்க இப்போது தயாராக இல்லை என்று எனக்கு தோன்றியதால் இந்த படத்தின் கதையை தான் ஷங்கரிடம் படிக்க கொடுத்தேன். ஷங்கருக்கு இந்த கதை பிடித்திருந்ததாகவும் இதை அடிப்படையாக வைத்து அவர் இந்த கதையில் பல்வேறு மாற்றங்கள் செய்து மிக பிரமாண்டமான ஒரு கதையை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு இயக்குநர் எழுத்தாளராக இருந்து இன்னொரு இயக்குநருடன் வேலை செய்வதில் எனக்கு ஏதாவது ஈகோ இருந்ததா என்று கேட்கிறார்கள். அப்படி எதுவுமே கிடையாது. ஷங்கர் எனக்கு நல்ல நண்பர். அதனால் அவருடன் எனக்கு ஈகோவெல்லாம் கிடையாது என்றார்.