திருவனந்தபுரம்: மலையாளத்தில் நேரடியாக உருவாகும் படங்கள் விதிகளை மீறி முன்கூட்டியே ஓடிடி தளங்களில் வெளியிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 22ம் தேதி முதல் கேரள தியேட்டர்களில் மலையாள படங்கள் திரையிடப்படாது என்று, கேரள திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலுள்ள தியேட்டர்களில், மலையாள படம் வெளியான 42 நாட்களுக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும் என்ற ஒப்பந்தம் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி தயாரிப்பாளர்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
திரையரங்க உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த கே.விஜயகுமார் கூறுகையில், ‘தயாரிப்பாளர்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வருகின்றனர். ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் முன்னதாகவே வெளியிடப்படுகின்றன. இதன் காரணமாக நாங்கள் இந்த முடிவை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். வரும் 22ம் தேதி முதல் மலையாள படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படாது’ என்றார். இதனால், மலையாளத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சவுபின் சாகிரின் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ என்ற படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள மம்மூட்டியின் பிரம்மயுகம் படமும் தியேட்டர்களிலிருந்து எடுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.