சென்னை: வடிவேலு பேசிய மிகப் பிரபலமான வசனம், ‘எனக்கு எண்டே கிடையாது’. இத்தலைப்பில் உருவான படத்தை ஆங்கிரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் அன்ட் புரொடக்ஷன் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ளார். விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு முதன்மை கேரக்டரில் கார்த்திக் வெங்கட்ராமன் நடிக்க, ஹீரோயினாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜூ, முரளி சீனிவாசன், சக்திவேல் நடித்துள்ளனர். தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்ய, கலா சரண் இசை அமைத்துள்ளார்.
வரும் அக்டோபர் 6ம் தேதியன்று திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடந்தது. அப் போது விக்ரம் ரமேஷ் பேசியதாவது: தயாரிப்பாளரிடம் கதை சொல்வதற்கு முன்பு, இதுதான் பட்ஜெட், நான்தான் ஹீரோ என்று சொல்லிவிட்டேன். ஒரு படத்துக்கு நல்ல கதையும், நல்ல தயாரிப்பு நிறுவனமும் அமைந்தால் போதும், யார் வேண்டுமானாலும் படத்தை உருவாக்கலாம். புரமோஷன் நிகழ்ச்சியில் ஹீரோயின் கலந்துகொள்ளவில்லை. காரணம், அவரை எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை.
‘இந்தியன் 2’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் அவர் பிசியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இனி பெரிய பட்ஜெட் படங்களில்தான் நடிப்பார் போலிருக்கிறது.
இப்படத்தில் ஒரே நாளில் பல பிரச்னைகளை சந்திக்கும் நான், இத்துடன் என் வாழ்க்கை முடிந்தது என்று நினைக்கும்போது, மீண்டும் ஒரு புதிய விஷயம் தொடங்குகிறது. அதனால்தான், ‘எனக்கு எண்டே கிடையாது’ என்ற டைட்டிலை சூட்டினேன். ஒரு முடிவில் இருந்து தொடங்கும் இன்னொரு கதையாக படம் உருவாகியுள்ளது.