சென்னை: தேஜ் சரண்ராஜ், அனன்யா மணி, ஸ்வாதி மீனாட்சி, ராஜேஷ் பாலச்சந்திரன், விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ், அருள்ஜோதி நடித்துள்ள படம், ‘வல்லவன் வகுத்ததடா’. இதை ஃபோகஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து எழுதி இயக்கியுள்ளார். ஹைப்பர்-லிங்க் திரைக்கதையுடன் முழுநீள கிரைம் திரில்லர் டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், வரும் 11ம் தேதி திரைக்கு வருகிறது.
படம் குறித்து விநாயக் துரை கூறுகையில், ‘எங்கள் படக்குழுவின் இரண்டு ஆண்டு கால கடுமையான போராட்டத்துக்கும், உழைப்புக்கும் கிடைத்துள்ள வெகுமதிதான் இப்படம். தற்போது இப்படத்தின் மீது அதிக வெளிச்சம் விழுவதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்செயன். ஒரு தயாரிப்பாளரிடம் இப்படத்தின் கதையைச் சொல்லி ஓ.கே ஆகியிருந்த நிலையில், என்னிடம் தருவதற்கான செக்கில் அவர் கையெழுத்து போடும்போது, ஜன்னல் பக்கமாக ஒரு பாம்பு வந்து படமெடுத்து ஆடியிருக்கிறது.
இதனால் ஏற்பட்ட சென்டிமெண்ட் பயத்தில் நடுங்கிய தயாரிப்பாளர், என்னை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். பிறகு என் தந்தையிடம் பல பொய்களைச் சொல்லி பணம் வாங்கி இப்படத்தை உருவாக்கி முடித்தேன். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்ய, சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார்’ என்றார்.