சென்னை: ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்துள்ள இறைவன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கியவர் அகமது. இவரது இயக்கத்தில் ஜெயம் ரவி, டாப்ஸி நடிக்க ஜனகண மன என்ற படம் உருவாக இருந்தது. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. கொரோனா சமயத்தில் இதன் படப்பிடிப்பு நின்றது. அதன் பிறகு படம் தொடங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் வேறொரு கதையை அகமது இயக்கினார்.
இந்த படத்துக்கு இறைவன் என தலைப்பிட்டனர். இதில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடியவில்லை. இந்த வாரத்தில் படத்தின் டீஸர் வெளியாகலாம் என கூறப்பட்டது. அந்த பணிகளும் தாமதமாகி வருகிறது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.