மலையாளத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து ₹5 கோடி செலவில் தயாரான ‘திரிஷ்யம்’ என்ற படம், கடந்த 2013ல் திரைக்கு வந்து ₹75 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படம் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழ் ரீமேக்கையும் இயக்கினார். பிறகு தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் ‘திரிஷ்யம்’ படம் ரீமேக் செய்யப்பட்டது. இப்படங்களை வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கினர். இதையடுத்து ‘திரிஷ்யம்’ படத்தின் 2ம் பாகம் உருவாக்கப்பட்டது. இதிலும் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்திருந்தனர். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், ‘திரிஷ்யம்’ படத்தின் 3ம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஜீத்து ஜோசப் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ேமாகன்லால், திரிஷா நடிக்கும் ‘ராம்’ படம் உருவாகி வருகிறது.மோகன்லால் வெவ்வேறு படங்களில் பிசியாக இருக்கிறார். எனவே, இந்த ஆண்டு இறுதியில் ‘திரிஷ்யம்’ படத்தின் 3ம் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. ‘திரிஷ்யம்’ 3ம் பாகத்தை மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாக்க ஜீத்து ஜோசப், மோகன்லால் முடிவு செய்துள்ளனர்.