ஐதராபாத்: ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்குவது தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறன் பதிலளித்தார். வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படம், இந்த வாரம் தெலுங்கில் டப் ஆகி வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்ற அவர் நிருபர்களிடம் கூறியது: ஜூனியர் என்டிஆருடன் மீட்டிங் நடந்தது உண்மைதான். அவருக்காக நான் எழுதிய கதை அப்படியே இருக்கிறது. அதில் அவர்தான் நடிப்பார். ஆனால் அது எப்போது சாத்தியம் என்பது தெரியாது. இப்போதைக்கு நானும் எனது தமிழ் படங்களின் புரொஜெக்ட்டுகளில் பிசியாக இருக்கிறேன். தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோரிடமும் கதை சொல்லியிருக்கிறேன். சில காரணங்களால் அந்த படங்களை தொடங்க முடியவில்லை.
தனுஷ் நடித்த வட சென்னை கதையைத்தான் அல்லு அர்ஜுனிடம் கூறியிருந்தேன். சினிமாவில் எல்லா சந்தர்ப்பங்களிலும் அனைத்து விஷயங்களும் ஒன்றாக கைகூடி வந்துவிடாது. நிறைய திட்டமிடல்கள் நடக்கும். அதில் சில விஷயங்கள்தான் நடைமுறைக்கு வரும். அந்த விதத்தில் சில படங்கள் சாத்தியப்படாமல் போய்விட்டன. அடுத்ததாக சூர்யா நடிப்பில் வாடிவாசல் படம் இயக்குகிறேன். அதற்கு முன் விடுதலை 2ம் பாகம் வேலைகள் பாக்கி இருக்கின்றன. பிறகு வடசென்னை 2 படமும் அடுத்த ஆண்டு துவங்கும். வெப்சீரிஸ் ஒன்றை இயக்குவதற்கான திட்டங்களும் இருக்கின்றன. இவ்வாறு வெற்றிமாறன் கூறினார்.