சென்னை: மலையாள படத்துக்காக களரி கற்று நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால். அவர் கூறியது: மலையாளத்தில் பாயின்ட் 3 8 படத்தில் நடிக்கிறேன். வழக்கமாக ரிவால்வர் பயன்படுத்துவோருக்கு இந்த தலைப்பு எளிதில் புரியும். இது ஒரு ஆக்ஷன் படம் என்பதாலேயே இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் டாக்டராக நடிக்கிறேன். ஆனால், சண்டை காட்சியில் அதிரடியாக நடித்துள்ளேன். அத்துடன் ஒரு பாடல் காட்சியை கேரளாவிலுள்ள கிராமத்தில் படமாக்கினர். அந்த பாடலானது, கேரள கலாசாரத்தை பறை சாற்றும் வகையில் அமைந்திருக்கிறது. களரி, மோகினி ஆட்டம், கதகளி உள்பட கேரள கலாசாரத்திலுள்ள அத்தனை கலைகளையும் அந்த ஒரு பாடலில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் சுகுமார். இதற்காக இந்த பாடல் காட்சியில் மட்டும் 7 விதமான தோற்றங்களில் நான் நடித்துள்ளேன். இந்த ஒரு பாடல் காட்சிக்காக, களரி கற்றேன். கதகளியும் கற்றேன். இந்த பாடல் காட்சியில் பரதநாட்டியமும் இடம்பெறுகிறது. தமிழில் வெற்றி ஜோடியாக ஒரு படம், சாரா என்ற படம் ஆகியவை கைவசம் உள்ளது. கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தை காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அஜினிஷ் தயாரிக்கிறார். சுதீப் நடித்த விக்ராந்த் ரோணா படத்தை இயக்கிய அனூப் பண்டாரி இதில் ஹீரோவாக நடிக்கிறார். இதில் குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்கிறேன். இவ்வாறு சாக்ஷி அகர்வால் கூறினார்.