கீர்த்தி சுரேஷ் நடிகை மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு முகமும் உண்டு. அதாவது, காஸ்ட்யூம் டிசைன் தெரியும். நடிக்கும் படங்களில் அவரது உடைகளை அவரே வடிவமைக்கிறார். அது, சில நேரங்களில் மட்டும்தான். மற்றபடி, படத்துக்கு தனியாக ஒப்பந்தமாகியுள்ள காஸ்ட்யூம் டிசைனரைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார். சினிமா மற்றும் உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களுக்குச் செல்லும்போது அவர் அணியும் உடைகளை அவரே வடிமைக்கிறார். மேக்கப், காஸ்ட்யூம்ஸ், ஸ்டைல் என்று தன்னை அவர் செதுக்கிக்கொள்கிறார். காஸ்ட்யூம் மற்றும் பேஷன் டிசைனிங்கில் கீர்த்திக்கு ஆர்வம் வந்தது எப்படி? இதுபற்றி அவரே சொல்கிறார்…
“சினிமா பேமிலியில் இருந்து வந்தது எனக்கு மிகப்பெரிய பிளஸ் பாயின்ட்டாக இருக்கிறது. அப்பா சுரேஷ் குமார், மலையாளத்தில் நிறைய படங்கள் தயாரித்துள்ளார். அதில் சில படங்களில் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறேன். அம்மா மேனகா, பல மொழிகளில் ஹீரோயினாக நடித்தவர். அவர் நடித்த படங்களைப் பார்த்த பிறகுதான் எனக்கும் நடிப்பு ஆசை ஏற்பட்டது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டபோது, ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். ‘முதலில் பிளஸ் டூ படித்து முடி’ என்றார். முடித்தேன். அதற்குப் பிறகும் நான் நடிக்க அவர் அனுமதிக்கவில்லை. காலேஜ் சென்று படிக்க வேண்டும் என்றார். ஊகூம், இந்த மண்டையில் படிப்பு ஏற மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தது.
நான் எது செய்தாலும் அது அரைகுறையாகத்தான் இருக்கும். இன்டீரியர் டெக்கரேஷன் படித்தேன். பிறகு பேஷன் டிசைனிங் படித்தேன். ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. அதைவிட பாடுவதில் அதிக ஆர்வம் உண்டு. லைட், கிளாசிக், இந்துஸ்தானி மியூசிக் தெரியும். கீபோர்டு, வயலின் வாசிப்பேன். ஸ்விம்மிங், டென்னிஸ், பேட்மிண்டன், கிரிக்கெட் தெரியும். கிளாசிக்கல், கன்டம்ப்ரரி, வெஸ்டர்ன் டான்ஸ் கற்றுக்கொண்டேன். எழுதுவதில் ஆர்வம் கிடையாது. நாவல் படிக்கும் பழக்கம் கிடையாது.
கேரளாவில் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். நான் படிப்பை நிறுத்தியதும், பிலிம் கோர்ஸ் படிக்க நினைத்தேன். கிரியேட்டிவ் சைடில் கவனம் செலுத்த விரும்பினேன். நான் திரைக்குப் பின்னாலும், அக்கா ரேவதி திரைக்கு முன்னாலும் வர திட்டமிட்டோம். இப்போது நிலமை தலைகீழாகி விட்டது. சினிமா நடிகையாக திரைக்கு முன்னால் நான் வந்துவிட்டேன். கேரளாவில் அப்பா நடத்தும் பிலிம் அகாடமி பொறுப்பை அக்கா ஏற்றுக்கொண்டார். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் படித்த அவர், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ‘ரெட் சில்லீஸ்’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றினார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் நான் நடித்த ‘தொடரி’ படத்தின் ஆடியோ விழாவுக்குச் சென்றிருந்த என்னை, அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். காரணம், எனது காஸ்ட்யூம் மற்றும் மேக்கப், ஹேர் ஸ்டைல். எனது ஆடையை நானே வடிவமைத்தேன். நேரம் கிடைக்கும்போது நவீன ரக உடை வாங்கி வந்து, அதை எப்படி வடிவமைப்பது என்பது பற்றி யோசிப்பேன். சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘ரெமோ’ படத்தில் நான் அணிந்த ஆடைகளை காஸ்ட்யூம் டிசைனர் சைதன்யா ராவ் வடிவமைத்தார். அவருக்கு ஆலோசனைகள் சொன்னேன். தொடர்ந்து நான் நடிக்கும் படங்களுக்கு ஆடை வடிவமைக்கும் எண்ணம் இல்லை. மற்ற நடிகைகளுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை”.