ஐதராபாத்: சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜ். தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்து வரும் வருண் தேஜுக்கும், நடிகை லாவண்யா திரிபாதிக்கும் இடையே காதல் என்று கிசு கிசு பரவியது. இருவரும் ஜோடியாக பார்ட்டிகளுக்கு சென்றார்கள். வருண் தேஜ் வீட்டு விசேஷங்களில் லாவண்யா கலந்து கொண்டார். இருவரும் காதலிப்பதாக மீடியாவில் தகவல் பரவியது. ஆனால் இதை இவர்கள் மறுத்து வந்தனர். தமிழில் மாயவன் படத்தில் லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். மிஸ்டர், அந்தரிக்ஷம் 9000 கேஎம்பிஹெச் ஆகிய தெலுங்கு படங்களில் வருண் தேஜும், லாவண்யா திரிபாதியும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.
அப்போதுதான் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருண் தேஜுக்கும், லாவண்யா திரிபாதிக்கும் ஜூன் மாதம் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறதாம். இந்த நிகழ்ச்சியில் இருவீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொள்வார்களாம். இதையடுத்து இந்த ஆண்டின் இறுதியில் வருண், லாவண்யாவின் திருமணம் நடக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கான ஆயத்த வேலைகள் தொடங்கிவிட்டதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.