சென்னை: ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படம், ‘எல்.ஐ.சி’. இதில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு என பலர் நடிக்கின்றனர். பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் காதல் கதையாக உருவாகிறது. ‘ஜப்பான்’ ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இசையமைப்பாளரும், இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன் கூறியது:
விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு ‘எல்.ஐ.சி’ எனப் பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். கடந்த 2015ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் பெயரில் அந்த டைட்டிலைப் பதிவு செய்திருந்தேன். அதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தப் பெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார்.
ஆனால் ‘LIC’ என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக, இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் தலைப்பை அபகரித்துள்ளார். அவர் இந்த தலைப்பை விட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது வழக்கு தொடருவேன் என்றார்.