காஷ்மீர்: காஷ்மீரில் நடக்கும் தமிழ்ப் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள சாய் பல்லவி, தனது பெற்றோருடன் அமர்நாத் யாத்திரை சென்று, அங்கு இருக்கும் பனி லிங்கத்தை தரிசித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: எப்போதுமே நான் என் தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டேன் என்றாலும், நீண்ட நாட்களாக நான் செய்ய விரும்பிய யாத்திரையைப் பற்றி இங்கு எழுதுவதற்கு விரும்புகிறேன். ஏறக்குறைய 60 வயதான எனது பெற்றோரை அழைத்துச் செல்வது என்பது, ஒருவரால் வெளியே சொல்ல முடியாத உணர்ச்சிப்பூர்வமான சோதனையாகும்.
இந்த யாத்திரையில் அவர்களுக்கு ஏற்பட்ட மூச்சிரைப்பு, நெஞ்சு வலி மற்றும் பனிப்பொழிவில் ஏற்பட்ட சறுக்கல்கள் இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு, சர்வ வல்லமையுள்ள இறைவனிடம், ‘நீங்கள் ஏன் இவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள்’ என்று கேட்கத் தோன்றியது. அப்போது நான் கண்ட காட்சி, மலையேறி வருபவர்கள் அதிக களைப்பை உணரும்போதும், இனிமேல் இ்ங்கு மலையேறவே முடியாது என்று நினைக்கும்போதும், ‘ஓம் நமச்சிவாய’ என்று கோஷம் எழுப்புகின்றனர். உடனடியாக அவர்கள் யாத்திரையை தொடங்குகின்றனர். இந்த அமர்நாத் யாத்திரை மன உறுதியைச் சோதித்தது. எனது உடலைச் சோதித்து, இந்த வாழ்க்கையே ஒரு புனிதமான பயணம் என்பதை எனக்கு நிரூபித்தது என்பதே உண்மை.