திருவனந்தபுரம்: எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட மலையாள வில்லன் நடிகர் விநாயகனை போலீசார் கைது செய்தனர். மலையாள முன்னணி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர், விநாயகன். ‘சிந்தாமணி கொலை கேஸ்’, ‘சோட்டா மும்பை’, ‘பிக் பி’, ‘டாடி கூல்’ உள்பட பல படங்களில் வில்லன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சில மலையாளப் படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள அவருக்கு ‘கம்மட்டிபாடம்’ என்ற படத்தில் நடித்ததற்காக கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. கொச்சி கலூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வரும் விநாயகன், நேற்று குடிபோதையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுடன் ரகளையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். ஆனால், போலீஸ் நிலையத்தில் வைத்தும் விநாயகன் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார். பணியில் இருந்த போலீசாரை அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விநாயகனை கைது செய்தனர். பிறகு அவரை மருத்துவ பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.