சென்னை: கடந்த 2009 ஜூன் 5ம் தேதி ராசு மதுரவன் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற படம், ‘மாயாண்டி குடும்பத்தார்’. இதை யுனைடெட் ஆர்ட்ஸ் தயாரித்தது. சீமான், தருண்கோபி, சிங்கம்புலி, மயில்சாமி, மணிவண்ணன், பொன்வண்ணன், இளவரசு, ரவிமரியா, ஜி.எம்.குமார், நந்தா பெரியசாமி, ராஜ்கபூர் நடித்தனர். பாலபரணி ஒளிப்பதிவு செய்தார்.
சபேஷ், முரளி இசை அமைத்தனர். கூட்டுக்குடும்பத்தின் பாசத்தையும், பங்காளிகளின் சண்டையையும் அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் வெளிப்படுத்தி இருந்த இப்படம், 2009ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கான தமிழக அரசின் விருதில் 2வது பரிசை வென்றது. இப்படம் வெளியானபோது ராசு மதுரவன் இதன் 2ம் பாகத்தை உருவாக்க முடிவு செய்தார்.
ஆனால், திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்நிலையில், ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் 2ம் பாகத்தையும் தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பி.ஜெகன் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே 2ம் பாகத்திலும் நடிக்கின்றனர்.