சென்னை: அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது இலக்கு கிடையாது என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. சமீபத்தில் கிங் ஆப் கொத்தா படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்திருந்தார். இவர் கூறியது: சவாலான, இதுவரை நான் நடித்திராத வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். நல்ல பாத்திரம் என்றால் சிறிய வேடத்திலும் நடிப்பேன்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நான் நடித்த பூங்குழலி பாத்திரம் எனக்கு மிகுந்த வரவேற்பைக் கொடுத்தது. இது நான் எதிர்பாராதது. இந்த படம் எனக்கு பல கதவுகளை திறந்துள்ளது. வாய்ப்புகள் மட்டுமல்லாமல், மக்கள் மனதிலும் சிறந்த இடம் கிடைத்திருக்கிறது. அதை தக்கவைக்கவே விரும்புகிறேன். அதனால் அதிகமான படங்களில் நடிக்க விரும்பவில்லை. குறைந்த படங்களில் நடித்தாலும் மக்களை கவரும் வேடங்களை ஏற்று நடிக்க விரும்புகிறேன். இவ்வாறு ஐஸ்வர்யா லட்சுமி கூறினார்.