சென்னை: ராஜேஷ்வர் காளிசாமி, பிரசன்னா பாலச்சந்திரன் தயாரித்துள்ள ‘செவப்பி’ என்ற படத்தை எம்.எஸ்.ராஜா எழுதி இயக்கியுள்ளார். குமரன் என்ற 5 வயது சிறுவனின் கேரக்டரும், அவனது அம்மாவாக நடித்துள்ள பூர்ணிமா ரவியின் கதாபாத்திரமும் முதன்மையானது. சிறுவனின் தாய்மாமனாக ரிஷிகாந்த் நடித்துள்ளார். 1990களில் தமிழ்நாட்டிலுள்ள சிறிய கிராமத்தில் வசிக்கும் 5 வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் திரைக்கதை. அச்சிறுவன் ஒரு கோழியை நேசத்துடன் வளர்க்கிறான். ஒருகட்டத்தில் அக்கோழியை அவன் பிரிந்து செல்ல நேரிடுகிறது இதனால், இருதரப்பினரும் ஒற்றுமையாக வாழ்ந்த கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது. இறுதியில் அச்சிறுவனும், கோழியும் மீண்டும் இணைந்தனரா? கிராம மக்களின் கதி என்ன என்பது கதை. கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலுள்ள மத்திபாளையம் என்ற கிராமத்தில் கதை நடக்கிறது. முக்கிய வேடங்களில் ராஜாமணி பாட்டி, ஷ்ரவன் அத்வேதன், டில்லி, செபாஸ்டியன் ஆண்டனி நடித்துள்ளனர். எம்.மனோகரன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.பிரவீன் குமார் இசை அமைத்துள்ளார். ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 12ம் தேதி இப்படம் வெளியாகிறது.
109