சென்னை: சிவகார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியது: இதற்கு முன்பு பொங்கல் ரிலீஸாக எனது படம் ரஜினி முருகன் வெளியானது. இப்போது அயலான் வெளியாகியிருக்கிறது. கண்டிப்பாக அந்தப் படம் போல் இதுவும் மக்களை சந்தோஷப்படுத்தும் என்று நம்புகிறேன். இதுவரை ஏலியன் ஜானரில் தமிழ் சினிமாவில் படங்கள் வந்ததில்லை. அதை முதன்முறையாக நாங்கள் ட்ரை செய்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இது ஏலியன் ஜானர் மட்டுமில்லை ஃபேண்டஸியும் இருக்கிறது. கொடுக்கப்பட்ட பட்ஜெட்டுக்குள் சிஜி பணிகளை நாங்கள் சிறப்பாக செய்திருக்கிறோம் என்று நம்புகிறோம். கண்டிப்பாக இந்தப் படம் திருப்திப்படுத்தும்.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின்போது, வேறு படங்களில் பிசியாக இருந்ததால் ரகுல் பிரீத் சிங் வரவில்லை. ஆனால் படத்தின் ரிலீசுக்கு பிறகு நடக்கும் வெற்றி விழாவில் கண்டிப்பாக பங்குபெறுவேன் என உறுதி அளித்திருக்கிறார். இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதும் அதில் நான் நடிப்பதும் பெருமையாக இருக்கிறது. இந்த படத்தில் கெஸ்ட் ரோலோ அல்லது உங்கள் குரலோ இடம்பெற வேண்டும் என கமல் சாரை கேட்டிருக்கிறேன். இந்த படத்துக்காக கிளீன் ஷேவ் செய்து கெட்அப்பை மாற்றினேன்.
உடல் எடையை கணிசமாக குறைத்தேன். ஒரு கட்டத்தில் இதில் மாணவனாக தோன்றும் காட்சிகள் வரும். அதற்காகவே இந்த மாற்றங்களை செய்தேன். இதற்காக கடந்த சில மாதங்களாக புரோட்டின் உணவுகள் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த படம் ஆக்ஷன் பின்னணியில் இருக்கும். இதையடுத்து நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படமும் ஆக்ஷன் அட்வென்ச்சராக இருக்கும். இதில் நடிக்க மிருணாள் தாக்கூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான்.
அவருக்கு கால்ஷீட் பிரச்னை இருக்கிறது. அது சரிசெய்துவிட்டு அவர் நடிக்க வரலாம். இந்த ஆண்டு அயலானுக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமியின் படம் வெளியாகும். முருகதாஸ் படம் அடுத்த வருடம் வெளியாகலாம். ஒவ்வொரு படத்துக்கு பிறகும் ஒட்டு மொத்த படக்குழுவின் வலி இருக்கும். ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் அந்த வலி அவர்களுக்கு தெரியும். அதனால் அதன் மகிழ்ச்சியும் அதிகமாக இருக்கும். இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.