சென்னை: மாருதி பிலிம்ஸ் மற்றும் ஹெச் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ஹரி இணைந்து தயாரித்துள்ள படம் ‘டெவில்’. இந்த படத்தை ஆதித்யா இயக்கி உள்ளார். விதார்த், திருகன், பூர்ணா, சுப உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியதாவது: ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா, தங்கை, மனைவி, மகள் தவிர்த்து இன்னொரு பெண்ணின் அன்பு கிடைக்கும். அந்த அன்பு பேரன்பாக இருக்கும். அப்படியான அன்பை எனக்கு தந்தவர் பூர்ணா. அடுத்த ஜென்மத்தில் அவர் வயிற்றில் அவரது மகனாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த ஜென்மத்திலேயே அவர் எனக்கு தாய் தான். அவர் என் படத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இதனால் என்னையும், பூர்ணாவையும் பற்றி தப்பாக பேசுகிறார்கள். அதுபற்றி கவலை இல்லை. அவருக்கு திருமணம் என்றபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்றாலும் இன்னும் 5 வருடங்கள் அவர் நடித்திருக்கலாம் என்று நினைத்தேன். இப்போது கணவனோடு துபாயில் செட்டிலாகிவிட்டார். அதனால் அடிக்கடி அவரை பார்க்கவும் முடியாது. குழந்தை பெற்றுக் கொண்டதால் சற்று குண்டாகி விட்டார். அது இயல்பானதுதான். சாகும் வரையில் அவர் நடிக்க வேண்டும் என்றார். மிஷ்கின் பேசும்போது பூர்ணா தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். அவரை அருகில் உள்ளர்கள் தேற்றிக் கொண்டிருந்தார்கள்.