தமிழில் அமீர் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான படம், ‘பருத்திவீரன்’. இதில் மிகச்சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்ற பிரியாமணி, தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தார். ஆனால், திடீரென்று அவர் மும்பை தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை காதல் திருமணம் செய்த பிறகு திரையுலகில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இந்தியில் அவர் நடித்த ‘தி பேமிலிமேன்’ என்ற வெப்தொடர் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
சமீபத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா ஆகியோருடன் இணைந்து ‘ஜவான்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தனது உடல் நிறத்தை வைத்து கேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பிரியாமணி கூறுகையில், ‘எனது சமூக வலைத்தளத்தில் மேக்கப் இல்லாமல் இருந்த எனது போட்டோக்களைப் பதிவிட்டேன். உடனே அதைப் பார்த்துவிட்டு பலர், நான் கறுப்பாக இருக்கிறேன். மாநிறத்தில் இருக்கிறேன் என்று கேலி செய்தனர்.
சிலர், நான் ஆன்ட்டி மாதிரி இருக்கிறேன் என்றும் கிண்டல் செய்தனர். சரி, நான் அப்படி இருந்தால் உங்களுக்கு என்ன? இப்போது இல்லை என்றாலும், நாளை உங்களுக்கும் வயதாகி முதியவராகத்தான் போகிறீர்கள். எனக்கு இப்போது 38 வயது ஆகிறது. இந்த வயதிலும் கட்டுக்கோப்பான தோற்றத்தில்தான் இருக்கிறேன். நான் எப்படி இருக்கிறேனோ அதில் எனக்கு அதிக மகிழ்ச்சிதான். எனவே, உங்கள் வாயை மூடுங்கள்’ என்றார்.