திருவனந்தபுரம்: முதலில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற படம், ‘2018’. பிறகு பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இந்தப் படம், அந்தந்த மொழி ரசிகர்களுக்கு மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. கேரள மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளின் பின்னணியில் இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், ஆசிப் அலி, குஞ்சாக்கோ போபன், வினித் சீனிவாசன், லால் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் ஆஸ்கர் விருது போட்டியில், இந்தியா சார்பில் வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் போட்டியிடுகிறது. தற்போது ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிப்பதற்காக திருவனந்தபுரத்தில் தங்கியிருக்கிறார். அவரை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் மற்றும் ‘2018’ படக்குழுவினர் நேரில் சந்தித்தனர். அப்போது ரஜினி காந்த், ‘ஆஸ்கர் விருதை வென்று வாருங்கள்’ என்று படக்குழுவினருக்கு அன்புக் கட்டளையிட்டு வாழ்த்தினார். இதுபற்றி ஜூட் ஆண்டனி ஜோசப் கூறுகையில், ‘எங்களிடம் ரஜினி சார் பேசியபோது, ‘என்ன ஒரு அருமையான படம் எடுத்திருக்கீங்க.
ஆமாம், இதை எப்படி எடுத்தீங்க?’ என்று வியப்புடன் கேட்டார். மேலும், மலையாள திரையுலகம் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசினார். அடுத்து நான் இயக்கும் படம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். பிறகு அவரிடம் இருந்து நாங்கள் விடை பெறும்போது சந்தோஷமாக கைகுலுக்கி சிரித்த அவர், ‘ஆஸ்கர் விருதை வாங்கிட்டு வாங்க. அதுக்கு என் ஆசியும், பிரார்த்தனையும் உங்களோடவே இருக்கும்’ என்றார். இதுபோன்ற அற்புதமான தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கு நன்றி’ என்று சொன்னார்.