ஐதராபாத்: ராஷ்மிகா படத்தின் படப்பிடிப்பால் திருப்பதியில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படத்தை வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இதில் தனுஷ் நடிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதன்படி திருப்பதியில் தற்போது நடந்து வருகிறது. அங்கு மலையடிவாரத்தில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் திருமலைக்கு செல்லும் பக்தர்கள், மாற்று பாதைக்கு காவல்துறையினரால் அனுப்பப்பட்டனர். ஆனால், அந்த பாதை குறுகிய பாதை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமப்பட்டனர். அதேபோல் பள்ளிகளிலிருந்து வந்த மாணவர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். கிட்டத்தட்ட 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் காவல்துறையினர் மற்றும் பவுன்சர்களிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெகு நேரத்துக்கு பிறகு படப்பிடிப்பு முடிந்து சாலை வழக்கம் போல் இயல்பு நிலைக்கு திரும்பியது.