சென்னை: அமெரிக்கா மற்றும் மலேசியாவில் சில ஆவணப்படங்களை உருவாக்கியுள்ள நரேந்திர மூர்த்தி, தற்போது தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். சேகர்.ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இப்படம், டார்க் காமெடி ஜானரில் உருவாகிறது. இதில் சத்யராஜ், வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிரார்த்தனா, ஐரா ஆகியோர் நடிக்கின்றனர். ‘கோடியில் ஒருவன்’, ‘குரங்கு பொம்மை’ ஆகிய படங்களில் பணியாற்றிய ஆர்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசை அமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. ‘ஒரே இரவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நடக்கும் கதை. நான்கு வெவ்வேறு வீடுகளில் நான்கு கொலைகள் நடக்கின்றன. அந்த வீட்டில் இருப்பவர்கள் அந்த உடல்களை அபார்ட்மென்டுக்கு வெளியே எப்படி கொண்டு செல்கிறார்கள் என்பதுதான் கதை. பஞ்சதந்திரம் படத்தைப் போல, அடுத்து என்ன நடக்கும் என்கிற விறுவிறுப்பை இந்தப் படம் ரசிகர்களுக்கு கொடுக்கும்’ என்கிறது படக்குழு.