சென்னை: கவுண்டமணி, செந்தில் ஆகியோர் கடந்த 1980களில் தொடங்கி, பல ஆண்டுகள் வெற்றிகரமான காமெடி கூட்டணி அமைத்து வந்தனர். பல படங்களில் கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்துள்ளார். செந்தில் அதுபோல் நடிக்கவில்லை. காரணம், அவர் கதையின் நாயகனாக நடிப்பதாக தொடங்கப்பட்ட சில படங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’.
ராக் அன்ட் ரோல், ஏ.பி.புரொடக்ஷன் சார்பில் யாஷ்மின் பேகம், மணிமேகலை லட்சுமணன் தயாரித்துள்ளனர். சுந்தர் மஹாஸ்ரீ, சந்தியா ராமசுப்பிரமணியம் இளம் ஜோடிகளாக நடித்துள்ளனர். தவிர அபிநயஸ்ரீ, நதியா வெங்கட், பிரபு, சன்னி பாபு நடித்துள்ளனர். வெங்கட் முனிரத்னம், ஏ.சி.மணிகண்டன், ஸ்ரீநாத் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
ஜோசப் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். சுந்தர் மஹாஸ்ரீ கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ராஜ் கண்ணாயிரம் இயக்கியுள்ளார். ஒரு எம்எல்ஏவுக்கும், யூடியூபருக்கும் நடக்கும் மோதலை மையப்படுத்திய கதையான இதில், எம்எல்ஏவாக செந்தில், யூடியூபராக சுந்தர் மஹாஸ்ரீ நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படம் திரைக்கு வருகிறது.