சென்னை: குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா, பிறகு ஹீரோயினாக நடித்தார். தமிழில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பிறகு ‘ஜீவா’, ‘வெள்ளக்கார துரை’, ‘காக்கி சட்டை’, ‘ஈட்டி’, ‘பென்சில்’, ‘பெங்களூரு நாட்கள்’, ‘மருது’ உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். கடைசியாக 2017ல் வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் நடித்தார். தற்போது 6 வருடங்களுக்குப் பிறகு அவர் தமிழில் நடித்துள்ள ‘ரெய்டு’ படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார். அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். கதிரவன் ஒளிப்பதிவு செய்ய, மணிமாறன் படத்தொகுப்பு கவனித்துள்ளார். கே.கணேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைக்க, இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். கார்த்திக் இயக்கியுள்ள இ்ப்படத்தை எஸ்.கே.கனிஷ்க், ஜிகே.மணி கண்ணன் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். ‘ரெய்டு’ படத்தை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா தமிழில் புதுப்படத்தில் நடிப்பதற்கு கதைகள் கேட்டு வருகிறார்.