சென்னை: ‘‘துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.எழில். விஜய் நடித்த இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. அதன் பிறகு அஜீத் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’, பெண்ணின் மனதை தொட்டு, தீபாவளி, மனம் கொத்தி பறவை, வெள்ளக்காரதுரை உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். தற்போது அவர் தான் இயக்கிய தேசிங்குராஜா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில் விமல், பூஜிதா பொனாடா, ஹர்ஷிதா, ரோபோ சங்கர், ரெடின் கிங்ஸலி உள்பட பலர் நடிக்கிறார்கள். செல்வா ஒளிப்பதிவு செய்கிறார், வித்யாசாகர் இசை அமைக்கிறார்.
படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழாவும், எழிலின் 25வது ஆண்டு விழாவும் நடந்தது. இதில் இயக்குனர் எழில் பேசியதாவது: எனக்கு சினிமாவை தவிர வேறு வேலை தெரியாது. அதனால் கொடுத்த வேலைக்கு கடுமையாக உழைப்பேன். என்னுடைய முதல் படத்தில் முதல் இயக்குனர் போல வேலை செய்து கொண்டிருந்தேன். இப்போது இந்த படத்தில் ஒரு உதவி இயக்குனர் போல வேலை செய்து கொண்டிருக்கிறேன். ‘தேசிங்குராஜா’ படத்தின் முதல் பாகம் அதுவாகவே ஒரு இயல்பான கதையாக அமைந்தது.
இரண்டாம் பாகம் என்று வரும்போது முதல் பாகம் போல அட்டகாசமாக இது வருமா என்று என்னிடம் பலரும் கேட்டார்கள். அதில் விமல் ஜாலியாக பண்ணியிருப்பாரே தவிர இந்த அளவிற்கு பக்குவப்பட்டவராக பண்ணி இருக்க மாட்டார். இதில் மிகச் சிறப்பாக நடித்து வருகிறார். கூடவே ஜனாவும் மிக அற்புதமாக பண்ணிக் கொண்டிருக்கிறார். படத்தில் மூன்று கதாநாயகிகள் இருக்கிறார்கள். அவர்களும் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் என்னுடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் செல்வாதான் இந்த படத்திலும் என்னுடன் இணைந்து பணியாற்றுகிறார். அதேபோல பூவெல்லாம் உன் வாசம் படத்திற்கு பிறகு வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்காக பயிற்சி முகாம் நடத்தினேன். அதில் பங்கேற்றவர்கள் எல்லோரும் என்னை அழ வைத்து விட்டார்கள். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் இப்போது ஒளிபரப்பானாலும் நிறைய பேர் பார்க்கிறார்கள். ஒரு படம் தலைமுறையை தாண்டியும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் என்னுடைய காமெடி படங்களும் அடுத்தடுத்த கட்டத்திற்கு போய்க்கொண்டிருக்கின்றன. இவ்வாறு எழில் பேசினார்.