சென்னை: குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடத்தில் நடித்து வரும் ‘அருவி’ மதன், ‘நூடுல்ஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் அருண் பிரகாஷ் தயாரித்துள்ள இதில் ஹரீஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், பேபி ஆலியா நடித்துள்ளனர். படம் குறித்து ‘அருவி’ மதன் கூறியதாவது: சில வருடங்களுக்கு முன்பு நான் இயக்கிய ‘சீதாயணம்’ என்ற குறும்படத்தை ஹரீஷ் உத்தமன் பாராட்டினார். இதையடுத்து இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்ட நான், தெலுங்கு நடிகர் நானிக்காக தந்தை, மகன் சம்பந்தமான கதையை தயார் செய்து ஹரீஷ் உத்தமனிடம் சொன்னேன். அப்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. அந்த லாக்டவுனில் ‘நூடுல்ஸ்’ கதையை எழுதினேன். பிறகு ஹரீஷ் உத்தமனிடம் சொன்னபோது, ‘ஜெய் பீம்’ மணிகண்டன் பொருத்தமாக இருப்பார் என்று சொன்னார்.
தற்போது இப்படத்தில் நான் நடித்துள்ள போலீஸ் அதிகாரி வேடத்துக்கு ஹரீஷ் உத்தமனிடம் பேசினேன். ஏற்கனவே அவர் பல படங்களில் போலீசாக நடித்துள்ளதால், இதிலும் அதே கேரக்டரில் நடிக்க தயங்கினாலும், எனக்காக நடிக்க முன்வந்தார். பிறகு சில மாற்றங்கள் ஏற்பட்டதால், அவர் கதையின் நாயகனாகவும், நான் போலீஸ் அதிகாரியாகவும் நடித்தோம். கதையைக் கேட்ட ஷீலா ராஜ்குமார், ‘கலகலப்பு 2’ மாதிரி இருக்கிறது என்று சொல்லி என்னை அதிர வைத்தார். இப்படத்தை வரும் 8ம் தேதி சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார்.