சென்னை: தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் நடித்தவர், அனுயா. பிறகு ‘மதுரை சம்பவம்’, ‘நகரம்’, ‘நஞ்சுபுரம்’, ‘நண்பன்’, ‘நான்’ ஆகிய படங்களில் நடித்த அவர், பெங்காலி மற்றும் இந்தியில் நடித்துவிட்டு திடீரென்று திரையுலகை விட்டு விலகினார். நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவர், தற்போது டி.வி தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ‘நான் துபாயில் பிறந்து வளர்ந்தேன். தமிழில் ஓரளவு பேசுவேன். எனது பெற்றோர் மருத்துவர்கள். அண்ணன் வெளிநாட்டில் வசிக்கிறார். புனே கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற நான், பிறகு சினிமாவில் நடிக்க வந்தேன். விஜய் ஆண்டனி, ஜீவா, சுந்தர்.சி, ஹரிகுமார் ஆகியோருடன் நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறேன் என்று என்னைப் பற்றி வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய். இன்னும் நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். என்னிடம் யார், எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்’ என்று பேசியிருந்தார்.
இதையடுத்து அனுயாவிடம் பலர் கேள்வி கேட்டனர். அதில் ஒருவர், ‘இன்னும் ஏன் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்? திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதானே?’ என்று கேட்டார். அதற்கு உடனடியாகப் பதிலளித்த அனுயா, ‘என்னைச் சுற்றியுள்ள ஆண்கள் யாருமே நல்லவர்கள் இல்லை’ என்று மிகக் கடுமையாக தாக்கியுள்ளார். அவரது கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கமென்ட் பதிவிட்டுள்ளனர்.