ரிஷிகாந்த் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், அவரது பிணத்தைக் கண்டுபிடிக்கின்றனர். இதையடுத்து, அவரைக் கொன்றது யார் என்ற விசாரணையை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.பாக்யராஜ் மேற்கொள்கிறார். ரிஷிகாந்தின் மனைவி சோனியா அகர்வாலுக்கு கணவன் மீது சந்தேகம். இதைப் பயன்படுத்தி உள்ளே வருகிறார், அவருடன் பணியாற்றும் ஸ்ரீநாத். வீட்டு வேலைக்காரப் பெண் பிரணாவுடன் ரிஷிகாந்துக்கு அதிக நெருக்கம். பிரணாவின் கணவர் ராம்தேவ் மிகப்பெரிய குடிகாரன். தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருக்கும் ரிஷிகாந்த் மீது கோபத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் ரிஷிகாந்தைக் கொன்றது யார், ஏன் என்பது படத்தின் மீதி கதை. ராம்தேவ் இயக்கியுள்ளார். முழு படத்தையும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தாங்கி நிற்கிறார், பிரணா. ஜவுளிக்கடை ஊழியராக அறிமுகமாகி, பிறகு ஒரு குடிகாரனை திருமணம் செய்துகொண்டு, அதனால் இன்னொரு ஆணுடன் சேர்ந்து வாழ்க்கையையே தொலைக்கும் செல்லம்மாவாக வாழ்ந்திருக்கிறார். குடிகார கணவனாக ராம்தேவ் நடித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கான மிடுக்கு இல்லாவிட்டாலும், இயல்பாக நடித்துள்ளார் கே.பாக்யராஜ். இக்கதையில் சோனியா அகர்வாலுக்கு அதிக பங்கு இல்லை.
அன்றாடம் பத்திரிகைகளில் இடம்பெறும் கள்ளக்காதல் மற்றும் கொலை பற்றிய செய்திகளில் ஒன்றை நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது படம். கதைக்கு ஏற்ப மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அம்ரிஷ்.பி பின்னணி இசை பரவாயில்லை. பாடல்களுக்கு வேணு சங்கர், தேவ்.ஜி இசை அமைத்துள்ளனர். அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்கள் கதையை விறுவிறுப்பாக நடத்திச் செல்கின்றன. ஆனால், கிளைமாக்சில் திடீரென்று புகுத்தப்படும் இளைஞர்களின் கதை சலிப்பூட்டுகிறது. பிரணாவைக் காப்பாற்றும் கே.பாக்யராஜின் முடிவில் லாஜிக்கும், நியாயமும் இல்லை.