ஐதராபாத்: தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா, கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’, விஜய் ஜோடியாக ‘வாரிசு’ ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கில் ‘ரெயின்போ’ படத்திலும், அல்லு அர்ஜூன் ஜோடியாக ‘புஷ்பா 2’ படத்திலும், இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக ‘அனிமல்’ படத்திலும் நடித்து வருகிறார். கன்னட ஹீரோ ரக்ஷித் ஷெட்டியுடன் காதல் முறிவு ஏற்பட்ட பிறகு கன்னடத்தை விட்டு தெலுங்கில் தஞ்சமடைந்த ராஷ்மிகா, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஜோடியாக வெளிநாட்டுக்குச் சென்று வந்தாலும், தங்களது காதல் குறித்து வெளிப்படையாகப் பேசவில்லை. இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா ஹீரோவாக அறிமுகமான ‘பேபி’ என்ற தெலுங்கு படத்தைப் பார்த்த ராஷ்மிகா, ‘அந்த படத்தைப் பார்த்து தியேட்டரிலேயே கதறியழுது விட்டேன். ஒவ்வொரு காட்சியும் எனது இதயத்தில் மிக நீண்ட காலத்துக்கு தங்கியிருக்கும்’ என்று கூறியிருக்கும் கருத்து வைரலாகி வருகிறது.