சென்னை: ‘விருமன்’ படத்திற்கு பிறகு முத்தையா இயக்கி உள்ள புதிய படம் ‘காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா ஹீரோ. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சித்தி இதானி நாயகியாக நடித்துள்ளார். பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அறிமுக விழாவில் ஆர்யா பேசியதாவது: எனக்கு கிராமத்து கதை ஒன்றில் நடிக்க வேண்டும் என்று ஆசை. காரணம் கிராமத்து வாழ்க்கையே எனக்கு தெரியாது. அதோடு என்னைப்போன்ற நகர்புறத்து மனிதனுக்கு கிராமத்து வேடம் சவாலாக இருக்கும் என்பதால் கிராமத்து கதையில் நடித்து சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். இதற்கு பொருத்தமான இயக்குனராக முத்தையா தெரிந்தார். அவர் மண்சார்ந்த திரைப்படங்களை எடுக்கும் ஸ்டைல் எனக்குப் பிடித்திருந்தது. அவரை அணுகி படம் நடிக்க நினைத்தபோது அவர் நிறைய கிராமத்து கதைகள் இயக்கி விட்டதால் ஒரு நகர்புற கதையுடன் இருந்தார். அதுவும் நான் நடிக்க பொருத்தமான கதைதான். ஆனால் நான் கிராமத்து கதையில் நடிக்கும் எனது ஆசையை கூறி அதற்காக ஒரு கதை தருமாறு கேட்டேன். அப்படி தயார் செய்த கதைதான் இது. உணர்ச்சிகரமான கதையையும், கதாபாத்திரங்களையும் எனக்கு விளக்கும் போது முத்தையா நிஜமாகவே பல இடங்களில் அழுது விடுவார்.