சென்னை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான மனோஜ் பாஜ்பாய் தற்போது ‘கில்லர் சூப்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் அவருடன் கொங்கனா சென் சர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். அபிஷேக் சூபே இயக்கி உள்ளார். இதன் புரமோசன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த மனோஜ் பாஜ்பாய் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ் சினிமாவையும், தமிழ் கலைஞர்களையும் மிகவும் பிடிக்கும். சமீப காலமாக வெற்றி மாறனின் படங்களை ஆச்சர்யத்தோடு பார்க்கிறேன். அவர் படத்தில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். சமரன், அஞ்சான் படங்களில் நடித்தேன். அதன் பிறகு தமிழில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. வெப் தொடர்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருக்கிறேன்.
எனது வெப் தொடர்களை அதிகமாக தமிழ் ரசிகர்கள் பார்க்கிறார்கள். அதேபோல இதையும் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். இது டார்க் காமெடி வகையிலான தொடர். இதில் நான் முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன். பொதுவாக இரண்டு வேடங்கள் என்றால் அப்பா மகனாக, அண்ணன் தம்பியாக நடிப்பார்கள். நான் இதில் கணவன், கள்ளக்காதலன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன். வெப் தொடர்களுக்கு தணிக்கை வேண்டும் என்று தற்போது பலரும் கூறிவருகிறார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். காரணம் ஆன்லைன் என்பது அகன்று விரிந்த திறந்தவெளி. வெப் தொடர்களை தணிக்கை செய்வதன் மூலம் அந்த திறந்த வெளியை மூட முடியாது.