சென்னை: அசோக் செல்வன் நடித்த ‘சபா நாயகன்’ படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தின் சிறப்பு திரையிடலுக்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அசோக் செல்வன் கூறியதாவது: குடும்பத்தோடு பார்த்து மகிழும் படமாக ‘சபா நாயகன்’ வெளியாகி உள்ளது. இந்த படத்தில் 10 கிலோ எடை குறைத்து பள்ளி மாணவனாக நடித்திருக்கிறேன். அதற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தில் எனக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் எனது ஹீரோயின் எனது மனைவி கீர்த்தி பாண்டியன்தான். காதலிக்கும் எல்லோருக்குமே காதல் கைகூடுவதில்லை. எனக்கு அது திருமணத்தில் முடிந்தது. அந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்.
அவர் தொடர்ந்து நடிக்க அனுமதிக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். நடிப்பு என்பது கீர்த்திக்கு உயிர் மாதிரி. அவர் விரும்பிதை செய்ய அவருக்கு உரிமை உண்டு. தடுக்கும் உரிமை எனக்கு கிடையாது. அவருக்கான சுதந்திரத்தை எப்போதும் கொடுப்பேன். அவர் சுயமாக இருக்க வேண்டும், விரும்பியதை செய்ய வேண்டும். அதற்கு நான் துணையாக இருப்பேன். இதை செய், அதை செய்யாதே என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அவர் நடிப்பதில் நான் பெருமையும், சந்தோஷமும் அடைகிறேன். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த கண்ணகி படம் பார்த்து ஆச்சர்யமடைந்தேன். கடினமான ஒரு கேரக்டரை ேதர்வு செய்து அதில் அவர் பிரமாதமாக நடித்திருந்தது பெருமையாக இருந்தது. எனது மனைவி கீர்த்திக்கு நான் எப்போதும் ஓனர் இல்லை, பார்ட்னர்தான்.