சென்னை: ‘தான் ஹீரோவாக நடித்த படத்தின் புரமோஷனுக்கு கூட விமல் வரமாட்டாரா? தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை’ என்று, நடிகர் விமலை இயக்குனரும், நடிகருமான அமீர் கடுமையாக தாக்கினார். இதனால் பட விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. எம்ஐகே புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம், ‘குலசாமி’. வரும் 21ம் தேதி திரைக்கு வரும் இதில் விமல், தான்யா ஹோப் நடித்துள்ளனர். ‘தண்டாயுதபாணி’, ‘நாயகன்’, ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கியிருந்த காமெடி நடிகர் குட்டிப்புலி சரவண சக்தி இப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்ய, பாடகர் மகாலிங்கம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் விமல், தான்யா ஹோப் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டனர். இதுகுறித்து அமீர் பேசியதாவது:
‘உயிர் தமிழுக்கு’ படத்தில் சேர்ந்து நடித்தபோது குட்டிப்புலி சரவண சக்தி நண்பரானார். பல வருடங்கள் கடுமையாகப்போராடி படம் இயக்கியுள்ளார். திறமைசாலியான அவர் ஜெயிக்க வேண்டும். திரையுலகம் இன்றுள்ள நிலையில், முன்னணி நட்சத்திரங்கள் நடித்து, உலகப்புகழ் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து, இந்திய சினிமாவின் அடையாளம் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கே பெரிய அளவில் புரமோஷன் செய்து மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டியிருக்கிறது.
கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட புரமோஷன் செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது, ‘குலசாமி’ படத்தின் ஹீரோ விமல், ஹீரோயின் தான்யா ஹோப் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு வராமல் இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அந்தக்குறையை ஓய்வுபெற்ற போலீஸ் உயர் அதிகாரி ஜாங்கிட் நிவர்த்தி செய்துள்ளார். இப்படத்தில் அவர் நடித்துள்ளார். விமல் போன்ற நடிகர்களுக்கு ‘குலசாமி’ போன்ற படம் கிடைத்தது அபூர்வம். அதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அமீர் பேசினார். விமல் புறக்கணித்தது குறித்து விசாரித்தபோது, படத்துக்கான சம்பளத்தை வாங்கியிருந்தாலும், புரமோஷனில் பங்கேற்க பல லட்சம் ரூபாய் அவர் கேட்டு கிடைக்காததால் வரவில்லை என கூறப்படுகிறது.