கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிக்கும் படம், ‘வேட்டைக்காரி’. ஹீரோவாக ராகுல், ஹீரோயினாக சஞ்சனா சிங் நடிக்க, முக்கிய வேடங்களில் வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி காளிமுத்து காத்தமுத்து இயக்குகிறார். கே.ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்ய, ஏ.கே.ராம்ஜி இசை அமைக்கிறார். ராஜபாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையின் உச்சியில் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வெளியில் இருந்து பார்க்கும்போது அழகாக காட்சியளிக்கும் வனப்பகுதிகளில் வசித்து வரும் மக்களின் அவலங்களையும், அங்கு ஒரு காதல் ஜோடிக்கு பிறரால் ஏற்படும் பிரச்னைகளையும் மையமாக வைத்து படத்தை இயக்கிய காளிமுத்து காத்தமுத்து, பாடல்களுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் கதையை விவரித்தார். உடனே வைரமுத்து, ‘இப்படத்துக்கு ‘வேட்டைக்காரி’ என்று தலைப்பு சூட்டுங்கள். படம் மக்களிடையே சிறந்த முறையில் சென்று சேரும்’ என்று ஆலோசனை வழங்கினார். பிறகு இயக்குனரும், தயாரிப்பாளரும் இப்பெயரை தங்கள் படத்துக்குச் சூட்டினர்.