சென்னை: பிரிட்டிஷ் நடிகை எமி ஜாக்சன், தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘மதராச பட்டினம்’ என்ற படத்தில் ஆர்யா ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்கமகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘தேவி’, ‘2.0’ ஆகிய படங்களில் நடித்தார். தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள அவர், திடீரென்று வெளிநாட்டு இளம் காதலன் ஒருவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையைத் தேர்வு செய்து, திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரு மகனுக்கு அம்மா ஆனார். பிறகு காதலனை விவாகரத்து செய்துவிட்ட அவர், தற்போது புதிய காதலனுடன் வசித்து வருகிறார். கடந்த 4 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த எமி ஜாக்சன், தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் ஜோடியாக ‘மிஷன் சாஃப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’ படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
தமிழில் 4 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவில் நடிப்பதைத் தொடர்ந்து சமூக சேவையிலும் ஈடுபடுகிறேன். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சில பெண்களின் நல்வாழ்வுக்காக பணியாற்று கிறேன். அவர்களுக்காக சென்னையிலுள்ள சேவை அமைப்புடன் இணைந்து, என்னால் இயன்ற சில பணிகளைச் செய்கிறேன். சிறுவயது முதற்கொண்டே ஆண், பெண் என்று வித்தியாசம் பார்க்காமல் வளர்க்க வேண்டும். அப்படி நாம் வளர்த்தால், பெரியவர்களான பிறகு பெண்களை ஆண்கள் கவுரவிப்பார்கள். அதுபற்றித்தான் எனது மகனுடன் இப்போது முதல் நான் அதிகமாகப் பேசி வருகிறேன்.