சென்னை: சினிவாசா சில்வர் ஸ்கிரீன், சினிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ், பவன்குமார் இணைந்து வழங்கும் படம், ‘கஸ்டடி’. வரும் 12ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நாகசைதன்யா, கிரித்தி ஷெட்டி, பிரேம்ஜி அமரன் பங்கேற்றனர். அப்போது வெங்கட் பிரபு பேசுகையில், ‘இது என் முதல் தெலுங்கு படம். நாகசைதன்யாவுக்கு முதல் தமிழ்ப் படம். ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இது ஜாலியான கதை இல்லை. நாகசைதன்யாவுக்கு வில்லனாக அரவிந்த்சாமி, முக்கிய போலீஸ் அதிகாரியாக சரத்குமார், முதலமைச்சராக பிரியாமணி, பவர்ஃபுல் ஹீரோயினாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளனர். எனக்கு தெலுங்கு புரியும். நாகசைதன்யாவுக்கு தமிழ் தெரியும். மற்றவர்களும் தமிழ் நடிகர்கள் என்பதால், படப்பிடிப்பில் எளிதாக பணிபுரிய முடிந்தது. என் பெரியப்பா இளையராஜாவும், சகோதரர் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசை அமைத்துள்ளனர்’ என்றார்.
கிரித்தி ஷெட்டி பேசும்போது, ‘இளையராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோருடன் பணியாற்ற வேண்டும் என்ற என் கனவு இப்போது நிறைவேறியுள்ளது’ என்றார். நாகசைதன்யா பேசுகையில், ‘சென்னை சிட்டி என் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. என் சிறுவயதில் பார்த்து வியந்த அரவிந்த்சாமியுடன் சேர்ந்து நடித்தது எனக்கான பெருமை. பிளாக்பஸ்டர் மொமண்ட் என்றால், அது இளையராஜா இசைதான். வெங்கட் பிரபு படம் என்றாலே யுவன் சங்கர் ராஜா இருப்பார். இப்போது இளையராஜாவும் சேர்ந்துள்ளார் என்பது கூடுதல் பெருமை. ‘கஸ்டடி’ படம் எனக்கு நேரடி தமிழ்ப் படத்துக்கான வாசலை திறந்துவிடும் என்று நம்புகிறேன். படத்தில் வில்லன் அரவிந்த்சாமியை சாகவிடாமல் பாதுகாக்கும் ஹீரோவாக, போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளேன். தமிழ் சினிமாவில் இது புதிய கதைக்களமாக இருக்கும்’ என்றார்.