வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம், ‘கருமேகங்கள் கலைகின்றன’. தங்கர் பச்சான் இயக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, அதிதி பாலன், கவுதம் மேனன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது ‘விஜய் நடிக்க வந்த புதிதில் அவரது ஆல்பத்தோடு சென்று பாரதிராஜாவிடமும், கவுதம் மேனனிடமும் சென்று வாய்ப்பு கேட்டேன். அவர்கள் விஜயை வைத்து படம் இயக்க மறுத்து விட்டார்கள்’, என்றார் இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது ‘ஒரே காலகட்டத்தில் ஒரே ஊரில் இருந்து சினிமாவிற்கு நானும் பாரதிராஜாவும் வந்தோம். ஆனால், அவர் முதலில் இயக்குநராகிவிட்டார்.
அவரிடம் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார். விஜய்யை நடிகராக்க வேண்டும் என்று ஒரு ஆல்பம் தயாரித்துக் கொண்டு சென்றேன். என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்? நீயே பெரிய இயக்குநர் தானே, நீயே இயக்கிக் கொள் என்று மறைமுகமாக மறுத்துவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. என் பையனை அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், அதுவும் நடக்கவில்லை. இவரைப் போலவே கவுதம் மேனனிடமும் ஆல்பத்தை கொண்டு சென்றேன். அவரும் மறுத்துவிட்டார். அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான், இல்லையென்றால் விஜய் கமர்ஷியல் நாயகனாக ஆகியிருக்கமாட்டார்’ என்றார்.