சென்னை: தமிழில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நோட்டா’ ஆகிய படங்களில் நடித்திருந்த மெஹ்ரின் பிர்சாடா, பிறகு தனுஷ் ஜோடியாக ‘பட்டாஸ்’ என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து, பிறகு மணமகன் வீட்டாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் கைவிடப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியில் நடிக்கும் மெஹ்ரின் பிர்சாடா, தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். நயன்தாரா நடித்த ‘ஐரா’, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த ‘நவரசா’ ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, ஹாட்ஸ்டாரில் வெளியான ‘வி ஆர் பிரெக்னன்ட்’ என்ற தொடரை இயக்கினார்.
தற்போது அவர் இயக்கும் திரைப்படத்துக்கு டைட்டில் முடிவாகவில்லை. இதில் வசந்த் ரவி, மெஹ்ரின் பிர்சாடா, ‘விஸ்வாசம்’ அனிகா சுரேந்திரன், ‘புஷ்பா’ சுனில், நடன இயக்குனர் கல்யாண் நடிக்கின்றனர். ஜெ.எஸ்.எம் புரொடக்ஷன்ஸ் ஏ.ஆர்.ஜாபர் சாதிக், எம்பரர் எண்டர்டெயின்மெண்ட்ஸ் இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரிக்கின்றனர். ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ ஆகிய படங்களில் மாறுபட்ட கேரக்டரில் தனது திறமையை நிரூபித்த வசந்த் ரவி, இப்படத்தில் வித்தியாசமான கேரக்டர் ஏற்றுள்ளார். பிரபாகரன் ராகவன் ஒளிப்பதிவு செய்ய, ‘சொப்பன சுந்தரி’ அஜ்மல் தசீன் இசை அமைக்கிறார். இப்படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற இயக்குனரும், நடிகருமான அமீர் படக்குழுவினர் மற்றும் வசந்த் ரவியை வாழ்த்தினார்.