சென்னை: இராம.நாராயணன் இயக்கத்தில் கடந்த 1990 பிப்ரவரி 2ம் தேதி திரைக்கு வந்து வெற்றி பெற்ற பக்திப் படம், ‘ஆடிவெள்ளி’. இதில் சீதா, நிழல்கள் ரவி, சந்திரசேகர், அருணா, வெ.ஆ.மூர்த்தி, ஒய்.விஜயா, ரா.சங்கரன், பிரதீப் சக்தி, குள்ளமணி நடித்திருந்தனர். யானையும், பாம்பும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தன. ‘வெள்ளிக்கிழமை ராமசாமி வர்றான்டா’ என்ற பாடலும், வெள்ளிக்கிழமை ராமசாமி என்ற பெயர் கொண்ட யானையின் சேட்டைகளும் அன்றைய ரசிகர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தி மகிழ்வித்தன.
என்.கே.விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்தார். சங்கர்-கணேஷ் இணைந்து இசை அமைத்திருந்தனர். இந்நிலையில், 34 வருடங்களுக்குப் பிறகு ‘ஆடிவெள்ளி’ படம் ரீமேக் செய்யப்படுகிறது. இதுகுறித்து இராம.நாராயணனின் மகனும், தயாரிப்பாளருமான முரளி ராமசாமி கூறுகையில், ‘இன்றைய காலத்துக்கும், டெக்னாலஜிக்கும், ட்ரெண்டுக்கும் ஏற்ப ‘ஆடிவெள்ளி’ படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளோம். கிராஃபிக்ஸ் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற இயக்குனரை தேர்வு செய்ய உள்ளோம். இதில் நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும்’ என்றார்.