ஐதராபாத்: அல்லு அர்ஜுன், ராம்சரண் சிறுவர்களாக இருந்தபோது அவர்களின் பாக்கெட் மணியை நான் பறித்துக் கொள்வேன் என பேசியிருக்கிறார் பவன் கல்யாண். சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், சகோதரி மகன் அல்லு அர்ஜுன் ஆகியோரும் முன்னணி ஹீரோக்கள். ஏற்கனவே நடந்த விழா ஒன்றில் பவன் கல்யாண், தனது இளமைக்கால விஷயங்களை பற்றி பகிர்ந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. அதில் பவன் கல்யாண் பேசியதாவது:
நடிக்க வருவதற்கு முன் மாதந்தோறும் 5000 ரூபாயை பாக்கெட் மணியாக சிரஞ்சீவி எனக்கு வழங்குவார். நடிக்கப் போனதும் பணம் தருவதை நிறுத்திவிட்டார். ஆனால் ஆரம்ப காலத்தில் நடிக்கும்போது உடனே சம்பளம் கிடைக்காது. படம் முடிய 6 மாதங்கள் ஆகும்போதுதான் கிடைக்கும். ராம்சரண், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட சிறுவர்களிடம் பாக்கெட் மணி நிறைய இருக்கும். உடனே அவர்களை அழைத்து டேய், நான் சம்பளம் வாங்கியதும் உங்களுக்கு வட்டியோடு இந்த பணத்தையெல்லாம் திருப்பி தருகிறேன் என சொல்லி அவர்களின் பாக்கெட் மணியை பறித்துக் கொள்வேன். அவர்களும் வேறு வழியில்லாமல் கொடுப்பார்கள். எனது படம் ரிலீசாகும்போது, அந்த பணத்தை வந்து கேட்பார்கள். எந்த பணம், எப்போ கொடுத்தீர்கள், போங்கடா என அவர்களை விரட்டி விடுவேன். அதை அவர்களும் இன்னும் மறக்கவில்லை. இவ்வாறு பவன் கல்யாண், கலகலப்பாக பேசிய வீடியோதான் தற்போது வைரலாகியுள்ளது.