சென்னை: தமிழில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி ரசிகர்களை பயமுறுத்திய படம், ‘டிமான்ட்டி காலனி’. கடந்த 2015ல் திரைக்கு வந்து ஹிட்டான இப்படத்தின் 2ம் பாகம், 8 வருடங்களுக்குப் பிறகு ‘டிமான்ட்டி காலனி 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்க, அருள்நிதி வித்தியாசமான கெட்டப்பில் ஹீரோவாக நடித்துள்ளார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையையும், அந்தப் படத்தின் முடிவுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களையும் இணைத்து 2ம் பாகத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் விஎப்எக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓசூர், சென்னை, ஆந்திர மாநில எல்லை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்த ராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் நடிக்கின்றனர். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை ஒயிட் லைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஞானமுத்து பட்டறை நிறுவனங்களின் சார்பில் விஜய் சுப்பிரமணியன், ஆர்.சி.ராஜ்குமார், அஜய் ஞானமுத்து இணைந்து தயாரித்து உள்ளனர். படத்தை வெளியிடும் உரிமையை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன் பெற்றுள்ளார்.