நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வந்துள்ள பக்கா சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படம் இது. திருச்சியில் தொடர்ந்து மர்மமான முறையில் ஒரே பாணியில் சில பெண்கள் கொல்லப்படுகின்றனர். அந்த சைக்கோ கொலையாளியைப் பிடிக்க திருச்சி அனுப்பி வைக்கப்படுகின்றனர், அனுபவம் வாய்ந்த போலீஸ் உயரதிகாரி சரத்குமாரும், புதிதாகப் பணியில் சேர்ந்த அசோக் செல்வனும். இருவரும் நேரெதிர் குணம் கொண்டவர்கள். சரத்குமார் அனுபவ திமிரும், கோபமும் கொண்டவர். அசோக் செல்வன் அமைதியான, பயந்த சுபாவம் கொண்டவர். இருவரும் சேர்ந்து கொலையாளியை எப்படிக் கண்டுபிடிக்கின்றனர் என்பது கதை.
குறைவான பேச்சு, சரியான திட்டமிடல், ஆழமான சிந்தனை என்று, ஒரு அனுபவ போலீஸ் அதிகாரியைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார், சரத்குமார். ஆங்காங்கே அவர் பேசும் ஒற்றை வரி வசனம், பளீர் ரகம். ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்றா’ என்று பன்ச் டயலாக் பேசாமல், இயல்பான போலீசாக நடித்துள்ளார் அசோக் செல்வன். பாத்ரூமுக்கு தனியாகச் செல்லவே பயப்படும் அவர், இறுதியில் வில்லனை துப்பாக்கியால் சுடும் அளவுக்கு மாறுவதை கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். சரத்குமாருக்கும், அசோக் செல்வனுக்கும் டெக்னிக்கல் உதவியாளராக வந்து இயல்பாக நடித்துள்ளார், நிகிலா விமல். அவருக்கும், அசோக் செல்வனுக்கும் நட்புடன் கலந்த ஈர்ப்பு ஏற்பட்டு, பிறகு அது காதலாக மாறும் தருணத்தில் படம் முடிந்துவிடுகிறது.
சைக்கோ கொலைகாரன் யார் என்று ஆடியன்சுக்கு தெரியாது. கதையின் நாயகர்கள் மெதுவாக நகர்ந்து சென்று அவர்களை கண்டுபிடிப்பார்கள் என்ற வழக்கமான டெம்ப்ளேட் கதையாக இல்லாமல், ஒரு குற்றவாளியைத் தேடும்போது, அந்த தேடலில் இல்லாத இன்னொரு குற்றவாளி பிடிபடுவதும்; சைக்கோ கொலைகாரர்கள் உருவாக இந்த சமூகம் எப்படி காரணமாக அமைகிறது என்பதையும் நுணுக்கமாகச் சொல்லியிருக்கிறது படம். மறைந்த சரத்பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அந்த கேரக்டருக்கு அவரது தோற்றமும், நடிப்பும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.
கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவும், ேஜக்ஸ் பிஜோயின் பின்னணி இசையும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளன. இரவில் படமாக்கப்பட்ட காட்சிகளில் லைட்டிங் மிரட்டுகிறது. சைக்கோ கொலைகாரர்கள் உருவாக பெண்களின் தவறான நடத்தை காரணம் என்ற டெம்ப்ளேட் இப்படத்திலும் உண்டு. 2 நிஜ சைக்கோ கொலைகாரர்களுக்கு இடையே, ஒருவர் மட்டும் தான் செய்த கொலைகளை ஒப்புக்கொண்டு சிறைக்குச் செல்கிறார். அவர் யார்? அல்லது போலீசின் டிராமாவா என்ற டீட்டெய்ல் இல்லை. சில குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், போர் தொழிலை சிறப்பாகவே செய்துள்ளார், அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா.