இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்த ‘முகமூடி’ படத்தின் மூலம் பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ‘முகமூடி’ படத்தின் தோல்வியின் காரணமாக தமிழ்ப்படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமா நோக்கி சென்றார்.
பின்னர் தெலுங்கில் பெரிய ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார் பூஜா ஹெக்டே. இதனால் மீண்டும் தமிழ் சினிமாவில் பூஜா ஹெக்டேவுக்கு வாய்ப்புகள் குவிந்தன.
தமிழில் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகவும் நடித்ததால் பான் இந்தியன் ஹீரோயினனார் பூஜா ஹெக்டே. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘குண்டூர் காரம்’ படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார். பூஜா ஹெக்டே அதிக சம்பளம் கேட்கிறார் எனவும் கால்ஷீட் பிரச்னையாலும் ‘குண்டூர் காரம்’ படத்தில் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்காத காரணத்தால் அவரை ‘குண்டூர் காரம்’ படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக சம்யுக்தா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ‘குண்டூர் காரம்’ படத்தில் இருந்து விலகியது தொடர்பாக பூஜா ஹெக்டே கூறியிருப்பதாவது: தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் ‘குண்டூர் காரம்’ படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானது உண்மை. ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமான நிலையில்தான் என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே நான் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டில் பிரச்னை ஏற்பட்டது. எனவே தான் ‘குண்டூர் காரம்’ படத்திலிருந்து நானாகவே விலகிவிட்டேன்” என கூறியுள்ளார்.