திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த அருந்ததி நாயர், மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2014ல் தமிழில் ‘பொங்கி எழு மனோகரா’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், அருந்ததி நாயர். பிறகு ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’, ‘சைத்தான்’, ‘கன்னி ராசி’, ‘பிஸ்தா’, ‘ஆயிரம் பொற்காசுகள்’, ‘சீரன்’ ஆகிய படங்களில் நடித்தார்.
தமிழில் நடித்த பிறகுதான் மலையாளத்தில் ‘ஒட்டகோரு காமுகன்’ படத்தில் நடித்தார். அவரது சொந்த ஊர் திருவனந்தபுரம். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஸ்கூட்டரில் கோவளம் அருகே சென்று கொண்டிருந்த அருந்ததி நாயர், திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனே அவர் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மலையாள டி.வி நடிகை கோபிகா அனில் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவல்: என் தோழி அருந்ததி நாயர், சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால் சமாளிக்க முடியவில்லை. நல்ல உள்ளம் கொண்டவர்கள் அவருக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.