சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பீரியட் பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து சமீபத்தில் தனுஷ் பிறந்த நாளில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர், வெளியானது. டீசரின் தொடக்கம் முதல் இறுதி வரை துப்பாக்கி குண்டுகள் சத்தம் தெறிக்கிறது. மேலும் யூடியூப்பில் இந்த டீசர் 3 கோடி பார்வைகளை கடந்து உள்ளது. இதற்கிடையே தற்போது தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என்று பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் இயக்குநரின் மீதான அதீத நம்பிக்கையினால் தனது அடுத்த படமும் இவரோடுதான் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
தனது சொந்த பட நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் தற்போது தனது 50வது படத்தினை இயக்குவதில் மும்முரமாக இருக்கிறார். அநேகமாக தனுஷ் 51வது படமாக இது இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.