சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘சலார்’. தவிர, ‘தி ஐ’ என்ற ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன், நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘கருப்பு எனக்கு மிகவும் பிடித்த கலர். வழக்கமாக நான் மாடர்ன் உடைகளைத்தான் விரும்பி அணிவேன். எனக்கு மிகவும் பிடித்த புடவை உள்பட பாரம்பரிய உடைகளை அணியும்போது, எனக்கு அவைகள் பாசிட்டிவ் உணர்வைக் கொடுக்கின்றன.
சில நேரங்களில் எனது தந்தை கமல்ஹாசன் புடவைகளைப் பரிசளிப்பார். மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலான புடவைகளை மட்டுமே அவர் எடுப்பார். நான் கருப்பு மற்றும் கருநீல புடவைகளை எடுத்துக் கொடுக்கச் சொல்வேன். நான் தமிழ்ப் பெண். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பேன். விரைவில் நானும், எனது தந்தை கமல்ஹாசனும் உருவாக்கிய ஆல்பம் ஒன்றை வெளியிடுகிறோம்.
என்னை நேரில் சந்திக்கும்போது பலர் கேட்கும் கேள்வி, ‘கமல்ஹாசனை வைத்து படம் இயக்குவீர்களா?’ என்பது தான். சினிமாவில் அவருடன் நான் மட்டுமல்ல, யாராலும் போட்டி போடவே முடியாது. அவரை எல்லாம் என்னால் இயக்க முடியாது. நான் அவரது வாரிசாக இருந்தாலும், அரசியல் ஆர்வம் எனக்கு கிடையாது. தற்போது நடிப்பு மற்றும் ஆல்பம் உருவாக்குவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறேன்’ என்றார்.