உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், தமிழ் சினிமா இயக்குனர். காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2 மாதங்களாக திரைப்பட வேலையாக மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ளார். கடந்த 8ம் தேதி மணிகண்டன் வீட்டில் திருடுபோனது. அப்போது ‘கடைசி விவசாயி’ படத்திற்காக, ஒன்றிய அரசு வழங்கிய தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்கள், ₹1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகை திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மணிகண்டன் வீட்டுவாசலில் பாலித்தீன் பை தொங்குவதை ரோந்து போலீசார் நேற்று பார்த்தனர். அந்த பையை பிரித்து பார்த்தபோது திருடு போன, தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களும், அதில் ஒரு கடிதமும் இருந்தது. கடிதத்தில், ‘அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கே’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தேசிய விருதுக்கான பதக்கங்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.